Home -- Tamil -- Perform a PLAY -- 008 (Earthquake at midnight)
8. நடு இரவில் பூமி அதிர்ச்சி
கப்பல் துறைமுகத்தை வந்து அடைந்தது. பவுலும், அவருடைய நண்பர் சீலாவும் பிலிப்பு பட்டணத்தை நோக்கிப் போனார்கள்.மார்க்கெட், தெருக்கள் என்று எல்லா இடங்களிலும் மீண்டும், மீண்டும் இறைவனுடைய வார்த்தையைக் கூறினார்கள்.
பவுல்: “இறைவன் உங்களை நேசிக்கிறார். அவர் தனது குமாரனை இந்த உலகில் அனுப்பினார். ஆண்டவராகிய இயேசுவை விசுவாசியுங்கள். நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள், காப்பாற்றப்படுவீர்கள்”.
லீதியாள் இதை நம்பினாள். இயேசுவைக் குறித்து சொல்லப்பட்டவைகளை ஆர்வமுடன் கவனித்தாள். மற்றவர்களோ எரிச்சல் அடைந்து, கோபத்துடன் கத்தினார்கள்.
மனிதன்: “அவர்கள் கலகத்தை உருவாக்குகிறார்கள். நாங்கள் இதைக் கேட்க விரும்பவில்லை. இந்த இடத்தை விட்டு அகன்று போங்கள்!”
கற்கள் எறியப்பட்டன. இறைவனின் செய்தியாளர்களை முழுக் கூட்டமும் திடீரென கொடூரமாகத் தாக்கியது. கோபமுற்ற மனிதர்கள் பவுல், சீலாவின் ஆடைகளைக் கிழித்து, அவர்களை சவுக்கால் அடித்தார்கள். அவர்களுடைய முதுகுப் பகுதியை தடிகளால் தாக்கினார்கள். அவர்கள் இருண்ட ஒரு சிறைச்சாலையில் கைகள், கால்கள் கட்டப்பட்டவர்களாக இருந்தார்கள். எங்கு பார்த்தாலும் காயம், முதுகுப் பகுதியில் கடுமையான வலி.
அவர்கள் முறுமுறுக்கவில்லை, எதையும் கேட்கவில்லை என்று நாம் வேதாகமத்தில் வாசிக்கிறோம். “ஏன் இப்படி நடைபெறும் படி இறைவன் அனுமதித்தார்?” என்று கேட்கவில்லை. அந்த நடு இரவில் அவர்கள் இறைவனை துதித்துப் பாடினார்கள். அப்போது இந்தக் காரியம் நிகழ்ந்தது. ஒரு மிகப்பெரிய பூமி அதிர்ச்சியை இறைவன் கொண்டு வந்து, அவர்களுக்கு உதவினார். அவர்களுடைய சங்கிலிகள் அறுந்து போயின. கதவுகள் திறவுண்டன. சிறைச்சாலைக் காரன் சத்தத்தை கேட்டு எழுந்தான். எல்லாரும் தப்பி விட்டார்கள் என்று நினைத்தான். அவன் மேலதிகாரியைக் குறித்துப் பயந்தான். எனவே அவன் தற்கொலை செய்ய பட்டயத்தை எடுத்தான் ...
பவுல்: “நில்! உனக்கு ஒன்றும் சேதம் ஏற்படுத்தாதே, நாங்கள் அனைவரும் இங்கே இருக்கிறோம்”.
உண்மையாகவே ஒருவரும் ஓடிப் போகவில்லை. சிறைச்சாலை காவற்காரன் பவுலின் பாதத்தில் விழுந்தான்.
சிறைச்சாலைக்காரன்: “நான் இரட்சிக்கப்பட என்ன செய்ய வேண்டும்?”
பவுல்: “நீ ஒன்றும் செய்யத் தேவையில்லை. இயேசு உனக்காக அனைத்தையும் செய்து முடித்து விட்டார். இதை நீ விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்”.
அதை சிறைச்சாலைக் காரன் விசுவாசித்தான். மாற்றம் அடைந்தான். அவன் தொடர்ந்து அவர்களை துன்புறத்தவில்லை. அவர்களுக்கு உணவு கொடுத்தான். அவர்களுடைய காயங்களுக்கு மருந்து போட்டான்.
அடுத்த நாள் காலையில் நீதிபதி செய்தியாளர்களை அனுப்பி, இரண்டு பேரையும் விடுவிக்கச் சொன்னார். அவர்களை மோசமாக நடத்தியதற்காக வருத்தம் தெரிவித்தார்கள். பிறகு பவுலும், சீலாவும் அநேக இடங்களுக்குச் சென்று, அநேகருக்கு இயேசுவைக் குறித்துக் கூறினார்கள்:
பவுல்: “ஆண்டவராகிய இயேசுவை விசுவாசியுங்கள். அப்பொழுது நீ இரட்சிக்கப்படுவாய். மெய்வாழ்வைப் பெறுவாய்”.
மக்கள்: உரையாளர், பவுல், மனிதன், சிறைச்சாலைக்காரன்.
© Copyright: CEF Germany